இந்தியாவில் முதல் கட்டமாக 150 ரயில்களை தனியாருக்கு வழங்க மத்திய அரசு அனுமதி

இந்தியா: இந்தியாவில் தற்போது வரை இந்த துறை மத்திய அரசின் கீழ் தான் செயல்படுத்தப்பட்டு கொண்டு வருகிறது. கூடிய விரைவில் தனியார் நிறுவனங்களும் ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளிக்கலாம் என்பது போன்ற தகவல்கள் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கிறது.

இதை அடுத்து முக்கிய நகரங்களில் பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில்கள் மற்றும் அதன் வழித்தடங்களில் ஒரு சிலவற்றை தனியாருக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.


ஆனால், மத்திய அமைச்சகம் தனியாருக்கு ரயில்களை இயக்குவதற்கான அனுமதி வழங்கி ஒப்பந்தமும் வெளியிட்டது. மத்திய அரசு தேர்வு செய்து வழங்கும் இடங்களில் தனியார் ரயில்கள் 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கு முதல் கட்டமாக 150 ரயில்களை தனியாருக்கு வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் இந்த திட்டம் எப்படி செயலாற்றபடுகிறது என்பதனை பொறுத்து தான் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 150 இடங்களில் இயக்கப்பட இருக்கும் ரயில்களுக்கு அந்தந்த தனியார் நிறுவனங்களே டிக்கெட் கட்டணத்தையும் நிர்ணயித்து கொள்ளலாம் என மத்திய அரசு கூறி உள்ளது.

தனியார் நிறுவனங்களால் இயக்கப்பட இருக்கும் இந்த ரயில்களில் மொத்தமாக 16 பெட்டிகள் வரை இருக்கலாம் என ரயில்வே துறையின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரயில்வே துறையின் மேம்பாட்டிற்காகவும், தனியார் துறையின் நலனுக்காகவும் தான் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது என கூறப்படுகிறது.