திருத்தப்பட்ட நாட்டின் வரைபடத்தை வெளியிட்டதால் இந்தியா எனது ஆட்சியை கவிழ்க்க முயல்கிறது - நேபாள பிரதமர்

இந்தியா 1,850 கி.மீ. எல்லையை நேபாளம் நாட்டுடன் பகிர்ந்து கொள்கிறது. இந்த எல்லையில் சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்கள் உள்ளன. இந்தியா நேபாளத்தின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. உறுதியான பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை இருநாடுகளும் கொண்டுள்ளன.

எல்லையைத் தாண்டி இருநாட்டு மக்களும் சுதந்திரமாக வாழ்கின்றனர். தற்போது, நேபாளத்தைச் சேர்ந்த சுமார் 32,000 கோர்கா வீரர்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். பாரம்பரியமான நட்புறவு இருநாடுகளிடையே இருந்தாலும், பல தசாப்தங்களாக எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. இந்தியாவின் ஆட்சேபத்தை பொருட்படுத்தாமல் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் லிபுலேக், காலாபனி, லிம்பியதுரா பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருவது தான் பிரச்னை நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்த பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்துக்கு அங்கீகாரம் அளிக்க வகை செய்யும் நேபாள அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஆதரவு பெருகி வருவதால் நேபாளம் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

தற்போது, காட்மாண்டுவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி, இந்திய தூதரகம் எனக்கு எதிராக செயல்படுகிறது. காட்மாண்டுவில் பல்வேறு இடங்களில் எனது ஆட்சியை கவிழ்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.