தமிழகத்தில் உள்ள 2 ஆயிரத்து 523 தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து கட்டண நிர்ணய குழு தகவல்

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஆன்லைன் முறையில் தான் வகுப்புகள் நடைபெற்று வந்தது. முன்னதாக கடந்த கல்வியாண்டில் தனியார் பள்ளிகள், கொரோனா ஊரடங்கால் வருமானம் பாதிப்பு இல்லாத அரசு ஊழியர்களிடம் 85 சதவீத கட்டணமும், வருவாய் இழந்து தவித்த பெற்றோர்களிடம் 75 சதவீத கட்டணத்தையும் 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் கட்டணம் செலுத்த இயலாத பெற்றோர்கள் கூடுதல் கட்டண சலுகை கோரி பள்ளிகளை அணுகும் பட்சத்தில் அதனை தனியார் பள்ளிகள் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதை அடுத்து கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்படவில்லை என்பதை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும், தனியார் பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட பள்ளியில் படிப்பை தொடர விரும்பாவிட்டால் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்,கடந்த பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் , தேர்வுகள் நடைபெற்றது. இதையடுத்து 2022- 2023 கல்வி ஆண்டிற்கான வகுப்புகளும் பள்ளிகளில் தொடங்கப்பட்டு உள்ளது. வருடம் தோறும் தனியார் பள்ளிகளுக்கு, அரசால் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.

இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் 2 ஆயிரத்து 523 தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என கட்டண நிர்ணய குழு தெரிவித்துள்ளது. இதை 400 தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாகவும், ஆகஸ்ட் மாதத்திற்குள் மீதமுள்ள பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயம் செய்யும் புதிய கட்டணம் 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.