கொரோனா தகவல்களை உலகிற்கு அறிய செய்த பெண் வழக்கறிஞருக்கு சிறை

பெண் வழக்கறிஞருக்கு சிறை தண்டனை... கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை, சமூகவலைத்தளங்களின் ஊடாக உலகிற்கு அறியப்படுத்திய சீன பெண் வழக்கறிஞருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக பத்திரிகையாளர் ஜாங் சான் மீதான வழக்கு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஷாங்காய் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்தது.

37 வயதான ஜாங் சான், ‘கொரோனா வைரஸ் குறித்து வெளிநாட்டு ஊடகங்களில் வதந்திகளை பரப்பினார்’ என்று அரச தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். ஜாங் சான் தரப்பு வழக்கறிஞர் வாதிட்ட போது, ‘உண்மை தகவல்களை மட்டுமே ஜாங் சான் வெளியிட்டார்’ என்று விளக்கமளித்தார்.


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஜாங் சானுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அப்போது நீதிமன்றத்தில் இருந்த ஜாங் சான் உரக்க குரல் எழுப்பி கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். இதற்காக அவருக்கு கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த பெப்ரவரி மாதம் வுஹான் நகருக்கு சென்ற ஜாங் சான், சமூக ஊடகவியலாளராக மாறி கொரோனா வைரஸ் குறித்த செய்திகளை சேகரித்தார். கொரோனா நோயாளிகளின் அவல நிலை, மருத்துவமனைகளில் நிரம்பி வழிந்த கூட்டம் தொடர்பான காணொளிகள், செய்திகளை வீசாட், டுவிட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இதனால், வதந்திகளை பரப்பியதாக கடந்த மே மாதம் அவர் கைது செய்யப்பட்டு ஷாங்காய் நகர சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஜூன் மாதம் முதல் ஜாங் சான் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். சிறை நிர்வாகம் தரப்பில் அவருக்கு குழாய் மூலம் திரவ உணவு செலுத்தப்படுகிறது.