மாற்று நடவடிக்கையில் இறங்குவோம்; மலையக மக்கள் முன்னணி தலைவர் எச்சரிக்கை

மாற்று நடவடிக்கையில் இறங்குவோம்... தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு தேசியப் பட்டியல் வழங்கப்படாவிட்டால் நிச்சயம் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இதுதான் தனது கடைசி தேர்தல் எனவும் இனிமேல் போட்டியிடமாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், மலையக மக்கள் முன்னணியும் முழுமையாக மறுசீரமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஹற்றனில் உள்ள மலையக மக்கள் முன்னணியின் கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “தேர்தலில் எமது வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக களப்பணியாற்றிய அதேபோல் வாக்களித்து ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது நன்றிகள்! 1991ஆம் ஆண்டு பிரதேச சபையில் ஆரம்பமான எனது செயற்பாட்டு அரசியல் பயணம் மாகாண அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என வளர்ச்சி பெற்றுள்ளது. அதனூடாக மக்களுக்கு பல சேவைகளைச் செய்துள்ளேன்.

சேவல், மயில், வெற்றிலை, தொலைபேசி என பல சின்னங்களின் கீழ் சவால்களுக்கு மத்தியில் போட்டியிட்டுள்ளேன். ஆனால், அவை அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளேன். மக்களும் என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர்.

2010, 2015ஆம் ஆண்டுகளில் ஆளுங்கட்சில் இருந்துதான் தேர்தலில் போட்டியிட்டோம். இம்முறை எதிரணியில் இருந்து களமிறங்கினோம். கணிசமான அளவு வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதுதான் எமக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும்.

அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று செல்வதை விடவும் அதிக ஆசனங்களைப் பெற்று நாடாளுமன்றம் செல்வதே சிறப்பு. அந்தவகையில் எமது அணியில் ஆறு உறுப்பினர்கள் இருக்கின்றனர். தேசியப் படடியல் ஒன்றும் அவசியம். அந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையேல் நிச்சயம் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம். திலகர், லோரன்ஸ், குருசாமி ஆகிய மூவரில் ஒருவருக்கு நிச்சயம் வழங்கப்பட வேண்டும்.

இதேவேளை, இனிமேல் தேர்தல்களில் போட்டியிடமாட்டேன். அதற்கான அவசியமும் இல்லை. எனவே, இந்தக் கட்சியை மறுசீரமைத்து கட்டியழுப்பவேண்டிய தேவை இருக்கின்றது. நான் உங்களை விட்டுச்செல்லமாட்டேன், ஆனால், நீங்கள் என்னை விட்டுச்சென்றால் அதற்கு நான் பொறுப்பு அல்ல. எம்முடன் நன்றாக பழகுகின்றனர். மறுநாள் அந்த பக்கம் சென்று முதுகில் குத்துகின்றனர். இப்படி கட்சி நடத்த முடியாது. எனவே, நிச்சயம் மறுசீரமைப்புகளைச் செய்வோம்.

மலையக மக்கள் முன்னணியின் மாநாடு கூட்டப்படும். எல்லா கட்டமைப்புகளும் கலைக்கப்படும். புதிதாக உருவாக்கப்படும். இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்” என்றார்.