பெண்ணுக்காக மாணவரை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை

சென்னை: சென்னை அருகே பெண்ணுக்காக மாணவரை கழுத்து அறுத்து கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்துரை சேர்ந்த ராகவ்(23) ஓசூரில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் ஓசூர் பாலாஜி தியேட்டர் அருகே அறை எடுத்து தங்கி இருந்தார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு அதே கல்லூரியில் படிக்கும் ஈரோட்டைச் சேர்ந்த பிரவீன் குமார், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரணவ் சச்சின் ஆகிய இரண்டு பேரும் கழுத்தை அறுத்து ராகவை கொலை செய்து இரண்டு மடிக்கணினிகள் மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், ஒரு மாணவி பிரவீன் குமார் உடன் பழகி வந்துள்ளார். திடீரென அவர் பிரவீன் குமாருடன் இருந்த நட்பை முறித்து கொண்டு ராகவுடன் பழகியதாக தெரிகிறது. இதனால் கோபத்தில் பிரவீன்குமார் மற்றும் பிரணவ் சச்சின் ஆகிய இருவரும் இணைந்து ராகவை கொலை செய்தது தெரியவந்தது.


இதனையடுத்து பிரவீன் குமார் மற்றும் பிரணவ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பிரணவ் சச்சின் மற்றும் பிரவீன் குமார் ஆகிய இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.