அமைச்சர் சேகர் பாபுவின் அண்ணன் தூக்கு போட்டு தற்கொலை

சென்னை: அமைச்சர் அண்ணன் தற்கொலை... சென்னையில் அமைச்சர் சேகர்பாபுவின் மூத்த சகோதரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் உடன் பிறந்த சகோதரரான பி.கே.தேவராஜ், சென்னை ஓட்டேரியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது 2 மகன்களும் பட்டப்படிப்பை முடித்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு 11 மணியளவில் அவர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஓட்டேரி காவல் துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், 63 வயதான அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் பி.கே. தேவராஜ், கடந்த சில வாரங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. எனினும், தற்கொலைக்கான காரணம், விரிவான விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என்று கூறப்படுகிறது.

அமைச்சருக்கு சொந்தமானவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் அவரது இல்லம் முன்பு கூடி இருந்தனர். அமைச்சரின் உடன் பிறந்த அண்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.