பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி இன்று சந்தித்து பேசுகிறார்

புதுடெல்லி: பிரதமர் மோடியை சந்திக்கிறார் உதயநிதி .... இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார். டெல்லி விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து, நேற்று மாலை டெல்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள், டெல்லி முத்தமிழ்ப் பேரவை நிர்வாகிகள் மற்றும் டெல்லி தமிழ்க் கல்விக் கழக நிர்வாகிகள் போன்றோரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். மேலும், டெல்லியில் பணியாற்றும் தமிழகப் பிரிவு அதிகாரிகளுடன் கலந்துரையாடி னார். இரவு 7 மணியளவில் பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இல்ல திருமண நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

இந்நிலையில், பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சந்தித்து பேசுகிறார். அமைச்சரான பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை உதயநிதி ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.அந்தவகையில் மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க உதயநிதி ஸ்டாலினுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர், மத்திய ஊரக வளர்ச்சித் துறை மந்திரி கிரிராஜ் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து, துறை தொடர்பான பல திட்டங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

மேலும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் உதயநிதி ஸ்டாலின் சந்திக்க உள்ளார். இச்சந்திப்புகளின் போது, தமிழகம் சார்ந்த பல திட்டங்கள், நீட் தேர்வு விவகாரம், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துவது உள்ளிட்டவை பற்றி உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்துவார் என தகவல் கூறப்படுகிறது.