முதல்-அமைச்சர் போடும் நாடகத்தை காண சகிக்கவில்லை; மு.க.ஸ்டாலின்

மக்களுக்கு இலவச தடுப்பூசி என்று நாடகம் ஆடுவதா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசின் செலவில் இலவசமாக அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று ஏதோ பெரிய சாதனை வாக்குறுதி போல முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பேரழிவு காலத்தில் மக்களை காக்கும் மருந்தை இலவசமாக கொடுக்க வேண்டியது ஒரு மக்கள் நல அரசின் கடமை. அந்தக் கடமையை ஏதோ மக்களுக்கு, தான் காட்டும் மாபெரும் சலுகையைப் போல எடப்பாடி பழனிசாமி நினைத்துக் கொள்கிறார்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்கும் மக்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி செய்ய மனமில்லாத முதல்-அமைச்சர், இலவச தடுப்பூசி என்று அறிவிப்பதன் மூலமாக தன்னை தாராள பிரபுவாக காட்டிக்கொள்ள போடும் நாடகத்தை காண சகிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.