கொரோனா தொற்று உறுதியானதால் எம்எல்ஏ அன்பழகன் தனியார் மருத்துவமனையில் அனுமதி

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக கட்சியின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வந்தார். இந்நிலையில் முன்னாள் திமுக தலைவர் கலைஞரின் 97 வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக தனிமைப்படுத்திக் கொண்ட அவருக்கு இன்று கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளதால் அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.