கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளை திறக்க மக்களிடம் வரவேற்பு இல்லை என கருத்துக்கணிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா குறைந்தபாடில்லை. கொரோனா பரவல் காரணமாக தொடர் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், வணிக வளாகங்கள், பன்னடுக்கு திரையரங்குகள், பன்னாட்டு விமான சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்டு 1-ந் தேதி ‘அன்லாக்-3’ என்ற பெயரில் அரசு என்னென்ன ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தவுள்ளது என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளநிலையில், கட்டுப்பாடுகள் தளர்வு தொடர்பாக ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்ற சமூக ஊடக தளம், நாடு முழுவதும் 255 மாவட்டங்களில், 34 ஆயிரம் பேரிடம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அடுத்த 60 நாட்களில் பன்னடுக்கு திரையரங்குகளுக்கு செல்ல விருப்பம் இல்லை என 72 சதவீதம் பேர் கூறியதாகவும், 6 சதவீதம் பேர் மட்டுமே இவற்றை திறக்க ஆதரவு தெரிவித்தாகவும் இந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. ஆகஸ்டு 1-ந் தேதி முதல் உள்ளூர் ரெயில்சேவை, மெட்ரோ ரெயில் சேவைகளை தொடங்க 63 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தாகவும், 29 சதவீதத்தினர் மட்டுமே ஆதரவு அளித்ததும் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த கருத்து கணிப்பில், பன்னாட்டு விமான சேவையை ஆகஸ்டு மாதம் தொடங்குவதற்கு 62 சதவீதத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததும், 31 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவான கருத்து தெரிவித்ததும் தெரிய வந்துள்ளது. இந்த முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.