10-வது முறையாக செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியா : நாட்டின் 77-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே இதையொட்டி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் சுதந்திர தின கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. டெல்லி செங்கோட்டையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

கடந்த ஜூலை 26-ம் முதல் செங்கோட்டை வளாகம் எஸ்பிஜி பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்கு 10,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, காலை 7.30 மணி அளவில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இவ்விழாவில் பிரதமர், மூத்த அமைச்சர்கள், முக்கிய பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். விழாவில் பல்வேறு துறைகளை சேர்ந்த 1,800 சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்றனர்.

10-வது முறையாக செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி: கடந்த 2014-ல் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைத்தது. அதன் பிறகு நடைபெற்ற 2019 தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றது. அந்த வகையில் சுதந்திர தினத்து அன்று 10-வது முறையாக செங்கோட்டையில் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி. தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் தேசியக் கொடிக்கு மலர் தூவப்பட்டது. நாட்டின் சுதந்திரத்துக்காக இன்னுயிரை துறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டு பேசி இருந்தார்.