பலத்த காற்று வீசுவதால் ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

ராமநாதபுரம் : சுழல் காற்று வீசுவதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை தடை விதித்து உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் , மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதியில் 45 கி.மீ. முதல் 65 கி. மீ. வரை சுழல் காற்று வீசுகிறது.

இதனால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட மீன் வளத்துறையினர் பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம், என்று அறிவித்து உள்ளனர்.


இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் தனுஷ்கோடியிலிருந்து மூக்கையூர் வரையிலான மன்னார் வளைகுடா பகுதியிலும், ராமேசுவரம் முதல் எஸ்.பி.பட்டினம் வரையிலான பாக் நீரிணை கடற்பகுதியிலும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும்

மேலும் 5000-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் கடலுக்குச் செல்லாமல் ஆழம் குறைந்த பகுதிகளில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதற்கு முன்னதாக நேற்று காலை பாம்பன் வடக்கு கடற்பகுதியில் பாக் நீரிணை கடல் உள்வாங்கி பின்னர் மதியம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.