நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் நாளை ஆர்டிஓ விசாரணை

நாளை ஆர்.டி.ஓ. விசாரணை... சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கில் ஆர்.டி.ஓ விசாரணை நாளை தொடங்கவுள்ளது.

சின்னத்திரை பிரபல நடிகை சித்ரா. இவர் பாண்டியன் ஸ்டோர்சில் முல்லையாக நடித்து வந்தார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஷுட்டிங் முடிந்து தனது கணவருடன் ஓட்டல் அறைக்கு வந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று குடும்பத்தினர் மற்றும் சக நடிகர், நடிகைகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது கணவர் ஹேம்நாத்திடம் 5ஆவது நாளாக இன்றும் போலீசாரின் விசாரணை நீடிக்கிறது.

இதேபோல் தூக்கிலிருந்து சித்ரா இறக்கப்பட்டபோது முதலுதவி சிகிச்சை அளிக்க வெளியிலிருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உள்ளது. ஆதலால் அந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் போலீசார் இன்று விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இதுபோல் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், இதில் ஹேம்நாத் தெரிவித்ததற்கு மாறான தகவல்கள் கிடைத்தால் அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிய வாய்ப்பிருப்பதாக சொல்லபடுகிறது.

இந்நிலையில் இவ்வழக்கில் ஆர்டிஓ தனது விசாரணையை நாளை தொடங்கவுள்ளார். முதல்கட்டமாக, சித்ராவின் பெற்றோரிடமும், பின்னர் ஹேம் நாத்தின் பெற்றோரிடமும் அவர் விசாரணை செய்ய உள்ளார்.