ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் உடலில் நச்சுப்பொருள் கலந்துள்ளது; வைத்தியசாலை தகவல்

நச்சுப் பொருள் கலந்துள்ளது... ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவான்லியின் உடலில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் ஜெர்மன் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சிக்கும் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான 44 வயதான அலெக்ஸி நவல்னி, கடந்த வியாழக்கிழமை, சைபீரியாவில் உள்ள டாம்ஸ்க் நகரிலிருந்து தலைநகர் மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்ற போது, திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து விமானம் ஓம்ஸ்கில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து நவால்னி விமான நிலையத்தில் பருகிய தேநீரில் நச்சு கலந்திருக்கலாம் என நவால்னியின் ஆதரவாளர்கள் குறிப்பிட்டனர். மேலும் அதன் பின்னணியில் ரஷ்ய ஜனாதிபதியின் அலுவலகம் இருக்கலாம் என்றும் கூறினர்.

மேலும் அவரை ஜெர்மனிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பதற்காக அனுப்பும்படி கோரப்பட்டபோதும் அவரால் விமானத்தில் பயணிக்க முடியாது என்று கூறி ரஷ்ய மருத்துவமனை அவரை ஜெர்மனிக்கு அனுப்ப மறுத்துவிட்டது.

இந்த நிலையில், நவாக்னி விடயத்தில் தலையிட்ட ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலும், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் தாங்கள் அவருக்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்ததை அடுத்து அவர் ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இதேநேரம், நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலை ரஷ்ய மருத்துவர்கள் மறுத்து, அவருக்கு வேறு ஏதோ பிரச்சினை முன்பே இருந்துள்ளது. இரத்தத்தில் சர்க்கரை குறைந்ததால்தான் அவர் மயக்கமடைந்துள்ளார் என்று அறிவித்தனர். இந்த நிலையில், ஜெர்மன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நவால்னியின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தாலும் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் செய்தி தொடர்பாளரான ஸ்டெபென் சீபர்ட், “நவால்னிக்கு யாரோ விஷம் வைத்துள்ளார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இப்படி நடந்ததற்கு ஏற்கனவே ரஷ்ய வரலாற்றில் உதாரணங்கள் உள்ளன. ஆகவே, உலகம் இந்த விடயத்தை மிகவும் உற்றுநோக்குகிறது.

அத்துடன் நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டுள்ளதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளதையடுத்து அவருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டியது அவசியமாகிறது” என மேலும் குறிப்பிட்டார்.