செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை

சென்னை: தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.

சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று காலை 4.30 மணி அளவில் தன்னுடைய படுக்கையிலிருந்து தவறி விழுந்துள்ளார்.

இதை அறிந்த காவலர்கள் உடனடியாக சிறையில் உள்ள மருத்துவர்கள் அணுகி அங்கு அவர்கள் உடல் நிலையை கவனித்து உள்ளனர். அதில் செந்தில் பாலாஜியின் இதயத்துடிப்பு வழக்கத்திற்கு மாறாக இருந்தது. எனவே இதன் காரணமாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

இதனை தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அமைச்சர் ந்தில் பாலாஜி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், உடல்நிலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீட்டுள்ளார். இம்மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.