கரூரில் நாளை முதல் கடைகள் 2 மணி வரை மட்டுமே இயங்கலாம்; ஆட்சியர் அன்பழகன் உத்தரவு

கரூர் நகராட்சி பகுதியில் ஜவுளி கடைகள், வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள் உள்ளிட்டவை நாளை முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக இன்று ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 1,254 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 56,845 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை அல்லாத மற்ற மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் கடைகள் இயங்குவதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கரூர் நகராட்சி பகுதியில் ஜவுளி கடைகள், வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள் உள்ளிட்டவை நாளை முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.