மகனுக்காக பாசக்கார தந்தை எடுத்த முடிவு; குவியும் பாராட்டுக்கள்

பாசக்காரத் தந்தை... கனடாவில் 8 வயதான டெரக் ப்ரூவிற்கு என்னும் சிறுவனுக்கு சிறு வயது முதலே மார்பு பகுதியில் வட்ட வடிவிலான அடையாளம் ஒன்று இருந்துள்ளது. இதன் காரணமாக, மகனுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அவனது தந்தையும் தனது உடலில் மகனுக்கு உள்ளதைப் போலவே பச்சைக் குத்தியுள்ளார்.

இதுகுறித்து சிறுவனின் தந்தை டெரக் ப்ரூ சீனியர் கூறியதாவது: 'என் மகன் பிறந்த போதே அவனது மார்பு பகுதியில் பெரிதாக அடையாளம் ஒன்று இருந்தது. தற்போது அவனுக்கு 8 வயதான நிலையில், நீச்சல் குளத்தில் குளிக்கும் போது கூட அந்த அடையாளத்தின் காரணமாக சட்டை அணிந்து கொண்டே குளிக்கிறான். அதே போல சில இடங்களில் அவன் சற்று தனிமையாக உணர்கிறான்.

அது எனக்கு சற்று வேதனையாக இருந்தது. மகனுக்கு நம்பிக்கையை அளிக்கும் வகையில், எனது உடம்பிலும் அவனது உடம்பில் உள்ளது போல அடையாளம் ஒன்றை பச்சை குத்திக் கொள்ள முடிவு செய்தேன். அதன்படி, தற்போது பச்சையும் குத்திக் கொண்டுள்ளேன்.

முதலில் இது சீக்கிரம் முடிந்து விடும் என நினைத்திருந்தேன். ஆனால், பச்சை குத்தி முடிக்க சுமார் 30 மணி நேரங்கள் ஆகி விட்டது. அதிக வலி இருந்தாலும் மகனுக்காக இப்படி செய்ததால் இந்த வலியும் சுகமாக உள்ளது' என மிகவும் உருக்கமாக அவர் தெரிவித்துள்ளார்.

என்னுடைய அப்பா எனக்காக இப்படி செய்வார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் இது மிகவும்
சந்தோஷமாக உள்ளது' என சிறுவன் டெரக் ப்ரூ தெரிவித்துள்ளார். மகனுக்காக பல மணி நேரம் வேதனையை பொறுத்துக் கொண்டு பாசக்கார தந்தை செய்த இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.