உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சமாக அதிகரிப்பு

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைவரும் மாஸ்க் அணிதல் முக்கிய ஒன்றாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருப்பினும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 69 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகள் கொரோனா வைரஸ் வேகமெடுத்துள்ளது. இந்த மூன்று நாடுகளிலும் தினமும் சராசரியாக 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் 2 கோடியே 10 லட்சத்து 69 ஆயிரத்து 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 64 லட்சத்து 15 ஆயிரத்து 840 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 64 ஆயிரத்து 640 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 39 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.