உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 53 லட்சத்தை கடந்தது

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

மேலும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 53 லட்சத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் 1 கோடியே 53 லட்சத்து 64 ஆயிரத்து 925 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலக முழுவதும் 2 லட்சத்து 79 ஆயிரத்து 368 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடைய 53 லட்சத்து 91 ஆயிரத்து 736 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறனர். இவர்களில் 66 ஆயிரத்து 174 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 93 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும் உலகம் முழுக்க கொரோனாவால் இதுவரை 6 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.