உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்தது

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 1.63 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6.51 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில், இந்தியா போன்ற நாடுகள் அடுத்தடுத்து இடத்தில் உள்ளன. கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வது சற்று ஆறுதலடைய செய்துள்ளது.