நிவர் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியிருப்பதாவது:
சென்னையில் தாழ்வான பகுதிகளை தவிர வேறு எங்கும் தண்ணீர் தேங்கியிருக்கவில்லை. இதனால் மக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை. மேலும் நிலைமை கட்டுக்குள்தான் உள்ளது.
பருவமழை தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சரியான முறையில் எடுக்கப்பட்டுள்ளன. 200 வார்டுகளிலும் மாநகராட்சி பணியாளர்களும் 600 மோட்டார் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.
நிவர் புயல் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை மக்கள் 1913 என்ற இலவச எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அவர் அறிவித்துள்ளார்.