தன்னைவிட அதிக தேசப்பற்று மிக்கவர் யாரும் இல்லை - டொனால்டு டிரம்ப்

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து இல்லாததால், கொரோனா வைரஸில் இருந்து தற்காத்து கொள்ள முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவியவர்களின் சுவாசக்காற்று மூலமாக வைரஸ் பரவுவதால் முகக்கவசம் அணிவது அவசியம் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போதும், செய்தியாளர்களை சந்திக்கும் போதும் என அனைத்து நேரமும் முக்கவசம் அணியாமல் சுற்றித்திரிந்தார். அதன்பின் அவரது நெருங்கிய அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோதும் அதிபர் டிரம்ப் முகக்கவசம் அணியவில்லை.

அதிபர் டிரம்ப் முகக்கவசம் அணியாயதை பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்தனர். இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி முதல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது டிரம்ப் முகக்கவசம் அணிந்து கொண்டே வருகிறார். தற்போது முகக்கவசம் அணிவதை டொனால்டு டிரம்ப் தேசப்பற்றுடன் ஒப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத சூழ்நிலையில் முகக்கவசம் அணிவது தேசப்பற்று மிக்க செயல் என பலர் தெரிவித்து வருகின்றனர். அப்படியாயின் உங்கள் விருப்ப அதிபரான என்னை விட யாரும் அதிக தேசப்பற்றுமிக்கவர் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.