நகருக்கு நடுவே குறுங்காட்டை உருவாக்கி அசத்தியுள்ள திருச்சி மாநகராட்சி

நகருக்கு நடுவே குறுங்காடு ஒன்றை உருவாக்கி அசத்தி உள்ளது திருச்சி மாநகராட்சி. இங்கு செல்லும் மக்கள் அடர் வனத்திற்குள் செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்று தெரிவிக்கின்றனர்.

மரங்கள் தான் மழைக்கு ஆதாரம் என்றால் காடுகள் தான் மரத்திற்கு ஆதாரம். ஜப்பான் நாட்டில் மிக நெருக்கமாக மரக்கன்றுகளை நட்டு காடுகள் போல் உருவாக்கி அதனை மியோவாக்கி என அழைக்கின்றனர்.

கடந்த 2019ம் ஆண்டு திருச்சி மாநகராட்சி மியோவாக்கி காடுகள் உருவாக்கும் திட்டத்தின் கீழ் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை நன்கு தயார்படுத்தி 53 வகையான 10 ஆயிரம் நாட்டு மரக் கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டன.

தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்களால் சொட்டு நீர் பாசன முறைப்படி தேவையான தண்ணீர் விடப்பட்டு பராமரிக்கப்பட்டது.

தற்போது இந்த மியோவாக்கி காடுகள் 20 அடி உயரத்திற்கு மேல் வளர்ந்து அழகுற ஒரு அடர்வனத்தை உருவாக்கியுள்ளது. குறைந்த நிலப்பரப்பில் உருவாக்கப்பட்ட இந்த அடர்வனத்தால் காற்று மாசு குறைந்து பறவைகள் வாழ ஏற்ற இடமாகவும், இதற்கிடையே அமைக்கப்பட்டுள்ள பாதைகள் ஒரு அடர் வனத்திற்குள் சென்று வந்த உணர்வை தருவதாகவும் கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.

மேலும் 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து சமவெளியில் காடுகளை உருவாக்கும் பணியில் களமிறங்கியுள்ளது திருச்சி மாநகராட்சி நிர்வாகம். திருச்சி மாநகராட்சியில் இந்த சிறப்பான முயற்சிக்கு உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்ததுடன், இதுபோன்ற திட்டங்களை அனைத்து மாநகராட்சிகளும் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.