தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தண்ணீரை உடனே திறக்கணும்... தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை கர்நாடக அரசு உடனே திறந்துவிட வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. வரும் 18-ம் தேதி நாடாளுமன்றம் கூடும் நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த நாடாளுமன்ற கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான முன்னறிவிப்புகள் ஏதெனும் வெளியாகும் என அதிகளவில் எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கூட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காவிரி விவகாரம் குறித்தும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் மனு தருவார்கள் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு கர்நாடக அரசு எழுதியுள்ள கடிதத்தில் தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன என சுட்டிக்காட்டிய அவர், காவிரி நீர் தராததற்கு உண்மைக்கு புறம்பான காரணங்களை கர்நாடக அரசு தெரிவித்தது ஏற்கத்தக்கதல்ல என விமர்சித்து தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை கர்நாடக உடனே விடுவிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.