சுவை நிறைந்த கொத்தமல்லி இலை சட்னி!

உடல் நலம் பாதுகாக்கும் கொத்தமல்லி இலையில் சுவையான சட்னி தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கொத்தமல்லி – 1 கட்டு
வெங்காயம் – 2
தக்காளி – 1
மிளகாய் – 5
தேங்காய் – 1/2 கப் (துருவியது)
உளுந்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 2 பற்கள்
இஞ்சி – 1 துண்டு
புளி – சுண்டைக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
கொத்தமல்லி தழையில் இலைகளை ஆய்ந்து, நீரில் அலசிக்கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியை சூடாக்கி, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுந்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு, வரமிளகாயினை போட்டு வதக்கவும். இவை மூன்றும் சிவந்ததும், கொத்தமல்லி இலையினை போட்டு வதக்குங்கள்.

அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, உப்பு, ஒரு துண்டு இஞ்சி, பூண்டு பற்கள், புளியினை போட்டு நன்கு வதக்கவும். பின்னர் துருவிய தேங்காய் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கிவிடுங்கள். இது ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தால் சுவையான கொத்தமல்லி சட்னி தயார்.