கத்திரி - மொச்சை பொரியல் செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். இது கிராமத்து சமையலில் முக்கிய இடம் பிடிக்கும் உணவு வகையில் ஒன்று. இதுகுறித்த செய்முறையை பாருங்கள்.
தேவையானவை: பிஞ்சுக் கத்திரிக்காய் - கால் கிலோ, பச்சை மொச்சை - 100 கிராம், நாட்டுப் பூண்டு - 4 பல் (நசுக்கவும்), இஞ்சி - ஒரு துண்டு (சுத்தம் செய்து, நசுக்கவும்) நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, சோம்பு (பெருஞ்சீரகம்) - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 10, நாட்டுத் தக்காளி - 4, நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கத்திரிக்காய், சின்ன வெங்காயம், நாட்டுத் தக்காளியை
மீடியம் சைஸில் நறுக்கவும். பச்சை மொச்சையை வேகவைக்கவும். வாணலியில் 2
டேபிள்ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, சோம்பு தாளிக்கவும். சோம்பு சிவந்த பின்
நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்க்கவும். பாதி வதங்கிய பின் நறுக்கிய
கத்திரிப்பிஞ்சு சேர்த்து, நன்றாக வதக்கி வேகவைத்த மொச்சை, அரை கப் நீர்
விட்டுக் கிளறவும்.
எல்லாம் நன்கு சேர்ந்து உதிர்உதிராக ஆன பின்
இறக்கவும். மீதமுள்ள எண்ணெயைக் காய்ச்சி நசுக்கிய பூண்டு, இஞ்சி, உப்பு,
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு புரட்டி கத்திரி - மொச்சை
கலவையில் சேர்த்துக் கலந்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.