இட்லி போண்டா கேள்விப்பட்டு இருக்கிறீர்களா... இதோ செய்முறை

சென்னை: இட்லி மீந்து போச்சா... எத்தனை நாட்கள்தான் இட்லி உப்புமா செய்வீர்கள். வித்தியாசமாக அதே நேரத்தில் ருசியாக இட்லி போண்டா செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள் -
இட்லி - 3
கடலைமாவு - 2 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - சிறிது
தண்ணீர் - 2 மேஜைக்கரண்டி
பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: இட்லிகளை உதிர்த்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உதிர்த்து வைத்துள்ள இட்லி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடலைமாவு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் இரண்டு மேஜைக்கரண்டி தண்ணீரும் சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு உருண்டைகளை போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும். மீதமுள்ள எல்லா உருண்டைகளையும் இதே முறையில் சுட்டு எடுக்கவும். சுவையான இட்லி போண்டா ரெடி.