ஆரோக்கியம் நிறைந்த பச்சை பயறு கிரேவி

சென்னை: பச்சை பயறு கிரேவி செய்து பாருங்கள். உங்கள் குடும்பத்தினரும் ருசித்து சாப்பிடுவார்கள். ஆரோக்கியமும் நிறைந்தது.


தேவையான பொருள்கள் -
பச்சை பயறு - 1/2 கப்
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மல்லித் தழை - சிறிது
அரைக்க -
தேங்காய் துருவல் - 1/4 கப்
முந்திரிப்பருப்பு - 5

தாளிக்க -
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1

செய்முறை - பச்சை பயறை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போட்டு 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

வெங்காயம், தக்காளி, மல்லித்தழை எல்லாவற்றையும் வெட்டி வைக்கவும். தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போடவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.

மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை, அவித்து வைத்துள்ள பச்சை பயறு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறுதியில் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும் சுவையான பச்சை பயறு கிரேவி ரெடி.
பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.