சத்தான சிவப்பு அவல் கிச்சடி செய்வது எப்படி?

காலையில் சத்தான உணவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று அவல் வைத்து சத்தான கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கெட்டி சிவப்பு அவல் - அரை கப்,
தேங்காய்ப்பால் - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 1,
நிலக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
உப்பு - சுவைக்கேற்ப,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு.

வறுத்து பொடிக்க
காய்ந்த மிளகாய் - 4.

செய்முறை
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அவலை நன்றாக கழுவி தேங்காய்ப் பாலில் ஊறவிடவும். நிலக்கடலையை வறுத்துப் பொடித்து கொள்ளவும். ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் அவலையும் (தேங்காய்ப் பால் முழுவதையும் அவல் இழுத்திருக்கும்) போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி, இறக்கும்போது வறுத்து பொடித்த நிலக்கடலை தூள், மிளகாய்தூள் தூவிக் கிளறவும்.

கடைசியாக கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும். தேங்காய்ப்பால் சேர்ந்திருப்பதால் சாப்பிட ருசியாக இருக்கும்.