அருமையான மரவள்ளிக்கிழங்கு அல்வா செய்வது எப்படி?

மரவள்ளிக்கிழங்கில் புட்டு, கூட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மரவள்ளிக்கிழங்கை வைத்து அருமையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
துருவிய மரவள்ளிக்கிழங்கு - அரை கிலோ
சர்க்கரை - 300 கிராம்
நெய் - 300 கிராம்
முந்திரி, பாதாம் - தலா 40
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை
அடிகனமான கடாயில் 4 ஸ்பூன் நெய்விட்டு முந்திரி, பாதாம் வறுத்தெடுத்து வைக்கவும். பின் வாணலியில் 4 ஸ்பூன் நெய்விட்டு துருவிய மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும். அதே வாணலியில் சர்க்கரையைப் போட்டு, 50 மில்லி தண்ணீர்விட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும். பின்பு அதில் வதக்கி வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்து நன்கு கிளறவும். நெய் பிரிந்து வந்தவுடன் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து கிளறி எடுக்கவும். சுவையான மரவள்ளிக்கிழங்கு அல்வா தயார்.