நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும் கேழ்வரகு, கேரட் தோசை

அதிக சத்துக்கள் நிறைந்த கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் உடலுக்கு நல்லது. இப்போது கேழ்வரகு மற்றும் கேரட் சேர்த்து தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானப் பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 2 கப்
தண்ணீர் - தேவையான அளவு
தோசை மாவு - 4 கரண்டி
சீரகம் - சிறிதளவு
கேரட் - 2
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை: வெங்காயம், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் கேரட்டை துருவி வைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், வெங்காயம், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கேழ்வரகு மாவில் தோசை மாவு, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர், தாளித்த வைத்துள்ள கலவை, துருவிய கேரட் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்குக் கலந்து புளிக்க வைக்க வேண்டும்.

கடைசியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் மாவை 1 கரண்டி ஊற்றி, சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு முன்னும், பின்னும் வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்தால், சத்தான கேழ்வரகு கேரட் தோசை தயார்..!