சிறந்த ஆரோக்கியத்தை அளிக்கும் எலுமிச்சை ரசம்

சென்னை: எலுமிச்சை என்றாலே நமக்கு எலுமிச்சை சாறு குடிப்பதுதான் நினைவுக்கு வரும். ஆனால் எலுமிச்சை வைத்து ரசமும் செய்யலாம். இதில் ரசம் வைப்பதால் அனைத்து பொருள்களின் மருத்துவம் ஒன்று இணைந்து சிறந்த பலனை அளிக்கவல்லது. எலுமிச்சை பழத்தால் ரத்த காயங்கள் உறைய வைக்கவும், உடல் எடை குறைய என்று பல வகையில் உதவியாக உள்ளது.

தேவையானவை:

எலுமிச்சை பழம் – 1 பெரியது
பச்சை மிளகாய் – 1
பூண்டு – 5 பல்
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
கருவேப்பில்லை – சிறிது
பச்சை கொத்தமல்லி – சிறிது
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
ரசப்பொடி – 2 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை: ரசம் வைப்பதற்கு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி எலுமிச்சை பழத்தை நன்றாக சாறு வரும் அளவு பிழிந்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நல்ல பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும். சிறிய உரலில் அல்லது கல்லால் பூண்டை நன்றாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்.

ரசகலவை பாத்திரத்தில் பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், ரசப்பொடி, கருவேப்பிலை, பச்சை கொத்தமல்லி போட்டு நன்றாக கலக்கவும் அல்லது கையால் நன்றாக பிசைந்துவிடவும். பிறகு தாளிக்கும் கரண்டியில் எண்ணையை ஊற்றி, கடுகு மற்றும் வெந்தயத்தை போட்டு நன்றாக தாளித்து அந்த பாத்திரத்தில் போடவும்.

இறுதியாக ரசகலவை கொண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். ஒரு கொதியில் நல்ல நுரையாக எழும்பி வரும்போது சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை இறக்கி வைக்கவும். இந்த சுவையான மணமான ரசத்தை சுட சுட சாதத்தில் போட்டு அப்பளம் அல்லது வற்றல் அல்லது அசைவ பிரியர்கள் முட்டை அல்லது கருவாடு வறுத்து சாப்பிடலாம்.