சுட்ட தக்காளி, பூண்டு சட்னி செய்து பாருங்கள்!!!

சென்னை: தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகிய 3 பொருட்கள் இருந்தால், அதைக் கொண்டு சுவையான சட்னியை செய்யலாம். இந்த சட்னியின் ஸ்பெஷலே தீயில் சுட்டு செய்வது தான். இந்த சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 3
முழு பூண்டு - 1
சீரகப் பொடி - 3/4 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

செய்முறை:முதலில் தக்காளியை மிதமான தீயில் தோல் சுருங்கும் வரை நன்கு வாட்டி எடுக்க வேண்டும். தக்காளியின் தோல் சுருங்கி, உள்ளே மென்மையாக வேகும் வரை வாட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதேப் போல் பூண்டு மற்றும் பச்சை மிளகாயை மிதமான தீயில் நெருப்பில் வாட்டி எடுக்க வேண்டும். பின் நெருப்பில் வாட்டிய தக்காளி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயின் தோலை நீக்கிவிட்டு, அதை ஒரு பெளலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதை ஒரு மத்து கொண்டு மசித்துக் கொள்ளலாம் அல்லது மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளலாம். இறுதியாக அதில் சீரகப் பொடி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் கொத்தமல்லியைத் தூவி நன்கு கிளறினால், சுவையான சுட்ட தக்காளி பூண்டு சட்னி தயார்.