சத்துக்கள் நிறைந்த ஓட்ஸ் பேரீச்சம் பழ லட்டு செய்முறை

சென்னை: ஓட்ஸ் பேரீச்சம் பழ லட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம். மிகவும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்தது.
பேரீச்சம் பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
மாலைக்கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். ஓட்ஸ்  பேரீச்சம் பழ லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
இன்ஸ்டன்ட் ஓட்ஸ் – 1 கப்,பாதாம், வேர்க்கடலை, வால்நட் எல்லாம் சேர்ந்து – 1/2 கப்,பேரீச்சம் பழங்கள் – 13,நெய் – 2 டீஸ்பூன்,ஏலக்காய் தூள் – சிறிதளவு.

செய்முறை: ஓட்ஸை வெறும் கடாயில் 5 நிமிடம் நன்கு வாசனை வரும் வரை வறுத்து ஆறவைக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

கொடுக்கப்பட்டிருக்கும் நட்ஸ்களையும் இதே போல் அரைக்கவும். பேரீச்சம் பழங்களை தனியே நைசாக அரைத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் கலந்து நெய் சேர்க்கவும்.

நெய் கலந்து பின்னர் உருண்டைகளாக பிடிக்கவும். இதை காற்றுப் புகாத டப்பாவில் போட்டுவைக்கவும். குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவு இது.