தித்திப்பான ஓணம் ஸ்பெஷல் ரெசிபி அடை பிரதமன்!

கேரளாவில் மிகவும் பிரபலமான ஓணம் பண்டிகை அன்று செய்யும் ஸ்பெஷல் ரெசிபியான அடை பிரதமன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
அரிசி - 1/2 டம்ளர்
தேங்காய்ப்பால் - 4 டம்ளர்
வெல்லம் - 2 டம்ளர்
ஏலக்காய் தூள் - சுவைக்கு
பால் - 1 டம்ளர்
நெய் - தேவைக்கு
தேங்காய் துண்டுகள் - கைப்பிடியளவு
முந்திரி - தேவையான அளவு
உலர்திராட்சை - 2 ஸ்பூன்

செய்முறை
வெல்லத்தை தண்ணீர் கரைத்து வடிகட்டி வைக்கவும். அரிசியை ஊற வைத்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.

வெந்த மாவு ஆறியதும் இலையிலிருந்து உரித்து எடுத்து, மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும். ஒர் வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

அதனுடன் அரிசி அடை துண்டுகளை பிரட்டி, பாலை சேர்க்கவும். அடுத்து அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை சேர்க்கவும். அனைத்தும் நன்கு வெந்ததும் தேங்காய் பாலை சேர்த்து, ஏலக்காய் பொடி செய்து போட்டு இறக்கவும். தித்திப்பான அடை பிரதமன் தயார்!