உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை தரும் பிடிகருணையில் குழம்பு செய்முறை

சென்னை: காய்கறிகள் எப்போதும் உடலின் ஆரோக்கியத்தை உயர்த்துவதில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பவை. சிலர் காய்கறிகளில் பலவற்றை ஒதுக்கி விடுவார்கள். ஆனால் நோய் எதிர்ப்பு சக்தியை காய்கறிகள்தான் வழங்குகின்றன. அந்த வகையில் உடலுக்கு ஊட்டமளிக்கும் பிடிகருணையில் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை

பிடிகருணை - கால் கிலோ (வேக வைத்து, தோலுரித்து, வட்டமாக நறுக்கவும்)
சின்ன வெங்காயம் - 10 (ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்)
கீறிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - இரண்டரை டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - ஒரு கப்
புளி - எலுமிச்சை அளவு (கரைத்துக் கொள்ளவும்)
வறுத்து பொடித்த சீரகம் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

- கனமான பாத்திரத்தில் புளிக் கரைசல், வெங்காயம், சீரகம், கீறிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு, எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து மூடி, கொதிக்க வைக்கவும்.

- நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப்பால், வேக வைத்த கிழங்கை சேர்த்து மிதமான தீயில் தளதளவென கொதிக்க வைத்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

- அருமையான ருசியில் பிடிகருணை குழம்பு ரெடி. இதை சூடான சாப்பாட்டில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டு பாருங்கள். சுவை உங்களை மயக்கி விடும்.