புதிதாக திருமணமானவர்களா? இந்த விஷயங்களில் கொஞ்சோ கவனமாக நடந்துக்கோங்க!

திருமணமான புதிதில் தம்பதிகள் செய்யும் சில பல தவறுகள் பின்னாளில் சந்தோஷமாக செல்ல வேண்டிய அவர்கள் வாழ்க்கையை சீரழித்து விடலாம். எனவே, நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள மணவாழ்க்கை எனும் பொக்கிஷத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சில விஷயங்களை நாம் கவனமாகத்தான் அணுகவும் வேண்டும். கையாளவும் வேண்டும். இந்த பதிவில் இளம் தம்பதிகளுக்காக சில அறிவுரைகள்.

கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் இளம் தம்பதிகள் சில சமயங்களில் தன்னை மறந்த அவசர நிலையில் கதவைத் தாழிடவும் மறந்து விடுவார்கள். பின்னர் மற்றவர்கள் வேடிக்கை பார்க்கும் படி ஆகிவிடும். ஆகவே இருவரில் யாரோ ஒருவர் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

திருமணமான புதிதிலேயே குழந்தை வேண்டும் என்று அவசரப்படுவார்கள். உங்களது ஹனிமூன் எனும் திருமணத்தின் முதல் கட்டத்தை குழந்தை பிறந்தால் உங்களால் முழுமையாக அனுபவிக்க முடியாமல் பொய் விடும்.

பாதுகாப்பற்ற இந்த டிஜிட்டல் உலகில் தனிப்பட்ட அந்தரங்க வீடியோக்களை எடுப்பார்கள். இந்த தவறை எப்போதும் செய்யாமல் இருப்பது நல்லது. அல்லது உங்கள் டிஜிட்டல் பொருட்களை வெளியிடங்களில் எதற்காகவும் கொடுக்க வேண்டாம்.

ஆரம்பத்தில் ஒருவருக்கொருவர் தங்களது பலவீனங்களை மறைத்துக் கொள்வார்கள். நல்ல பக்கங்களை மட்டுமே காட்டிக் கொள்வார்கள். பின்னாளில் உண்மை தெரிய வரும்போது அது அதிர்ச்சியை ஏற்படுத்தும். ஆகவே முடிந்தவரை உங்கள் மற்ற பக்கங்களையும் துணையோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

திருமணமான புதிதில் அல்லது நிச்சயம் முடிந்த சமயங்களில் உனக்காக நான் வானத்தையும் நட்சத்திரங்களையும் பறித்துக் கொண்டு வருவேன் என்பார்கள். நிஜத்தில் நமக்காக இட்லி மாவு கூட வாங்கி வர மாட்டார்கள்.

ஆரம்பத்தில் ஒருவரையொருவர் பிரியாமல் ஒட்டிக் கொண்டே இருப்பார்கள். பெவிக்விக் போட்டது போல அந்த இறுக்கம் இருக்கும். அதன்பின் தனித்துவத்திற்கான தேடலின் போது இந்த ஒட்டுதலை தோல்கள் பிய்ந்து போக வைத்துத்தான் பிரித்துக் கொள்வார்கள். குறைவான நெருக்கம் நிறைவான உணர்வைத் தரும்.

பெரும்பாலான காதல் திருமணவாதிகள் இந்தக் காதலுக்காகத் தங்களின் ஆருயிர் நட்பை இழந்திருப்பார்கள், படிப்பை மறந்திருப்பார்கள், வேலையைத் துறந்திருப்பார்கள். யதார்த்தத்தை உணர்ந்த பின்னர் மீண்டும் இந்த உறவுகளை மீட்டெடுக்க சிரமப்படுவார்கள்.

அதீத அன்யோன்யம் ஒரு சில மாதங்களில் நம்மை சலிப்படைய வைத்து விடலாம். ஆகவே அவ்வவப்போது சிறு சிறு இடைவெளிகள் விடுவதும் விலகி இருப்பதும் இந்த உறவு மூச்சு விடத் தேவையானதாக இருக்கும். அவ்வப்போது ஆச்சர்யங்களைத் தரும் விதத்தில் இந்த இடைவெளிகளை சந்தோஷங்களால் நிரப்பலாம்.

தங்களுக்குள் ஏற்படும் சாதாரண சண்டையை அவர்களாகவே சமாதானம் செய்து கொள்ளாமல் மூன்றாவது மனிதரை நாடுவார்கள். அவர்களோ உங்கள் அன்பைக் கண்டு பொறாமைப்படுபவர்களாகக் கூட இருக்கலாம். அப்புறம் என்ன உங்கள் சமாதானம் நீதிமன்றம் மூலம் கிடைக்க நேரிடும்.

ஒருவர் மீது அதீதமாகப் பற்று வைப்பது அவர்களை எரிச்சல் அடையச் செய்யலாம். நமக்கான இடம் அவர் மனதில் எப்போதும் இருக்க வேண்டும் என்றால் அவர்களுக்கான இடத்தை நாம் வழங்கி விடுவது அவசியம். திருமணம் மூலம் நீங்கள் ஒரு கூண்டுப் பறவையை விலைக்கு வாங்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.