அம்மா-மகள் உறவை அம்மாக்கள் கவனமாக கையாள வேண்டியது அவசியம்

அம்மா-மகள் உறவு உலகத்திலே மிக அழகானது. அந்த உறவை மேம்படுத்தும் பொறுப்பு அம்மாக்களிடம்தான் இருக்கிறது. அதை அம்மாக்கள் கவனமாக கையாள வேண்டியது அவசியம். ஐந்து வயது சிறுமியாக இருக்கும்போதே மகளுக்குரிய நேரத்தை ஒதுக்க, தாயார் முன்வரவேண்டும். அவளது குட்டி உலகத்து கனவுகள், கற்பனைகளை எல்லாம் மனந்திறந்து, தன்னோடு பேசும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ‘என் அம்மாவுக்கு நான் ஒரு தேவதை. என் ஆசைகளை எல்லாம் என் அம்மா நிறைவேற்றி வைப்பார்’ என்ற நம்பிக்கையை அவளுக்கு உருவாக்க வேண்டும்.

அவள் 15 வயதை எட்டும்போது சூழ்நிலைகள் மாறத்தான் செய்யும். கோபம் கொள்வாள்; ஆத்திரப்படுவாள்; கலகம் செய்வாள். அப்போது அவளது அத்தனை செயல்களிலும் மூக்கை நுழைத்துக்கொண்டு, அவளோடு சேர்ந்து தாயும் பிடிவாதம் பிடித்து போராட வேண்டியதில்லை. சில விஷயங்களை கண்டும் காணாததும்போல் கடந்து போய்விட வேண்டும். ‘டீன்-ஏஜில்’ இப்படித்தான் கலாட்டா செய்வார்கள் என்பதை புரிந்துகொண்டு, அவ்வப்போது மெதுவாக தலையிட்டு மென்மையாக இயல்பு நிலைக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும். அடுத்த 10 வருடங்களை இதமாக கையாண்டால், 25 வயதில் மகள், தாயின் அன்பிற்குரிய தோழியாகிவிடுவாள்.

டீன்-ஏஜ் மகள்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் அம்மாக்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டு, ஒரே மாதிரிதான் இருக்கிறது. உண்மையில் ‘டீன்-ஏஜ்’ மகள்கள் மீது எல்லா அம்மாக்களும் அதிகபட்ச அக்கறை செலுத்துகிறார்கள். அந்த அக்கறையை வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்கள். அந்த வெளிப்பாடு மகளுக்கு கோபத்தை உருவாக்குகிறது. மகள்களின் தோற்றம், அலங்காரம், செயல்கள் அத்தனையிலும் தாய்மார்கள் தலையிடக்கூடாது. மகள்களின் எல்லா நடவடிக்கைகளையும் விமர்சிக்கும் போக்கை கைவிட வேண்டும். அதே நேரத்தில் பிரச்சினைக்குரிய நட்புகள், பிரச்சினைக்குரிய பழக்க வழக்கங்களில் தாயார் தலையிட்டுதான் ஆகவேண்டும்.

பெரும்பாலான அம்மாக்கள், தன்னைப்போலவே தன் மகளும் வளரவேண்டும், வாழவேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த எதிர்பார்ப்பு தவறு. தன் மகளாகவே இருந்தாலும் அவள் இன்னொரு பெண். அவளுக்கென்று தனித்துவம் இருக்கும். அவளை அவளாக வளர அனுமதிக்கவேண்டும். மகளுக்கு, தாயார் பொறுப்புகளை வழங்கவேண்டும். மகளோடு தாய் அதிக நேரம் பேசவேண்டியதில்லை. ஆனால் அவளோடு இணைந்து அதிகநேரம் செயல்பட வேண்டும். அதன் மூலம் மகள் தனது வாழ்க்கைக்கு தேவையான அனுபவங்களை தாயின் செயல்பாடுகளில் இருந்து பெறுவாள். தாயும், மகளும் வெவ்வேறு மனிதர்கள். ஒவ்வொரு வருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள், குணாதிசயங்கள், கருத்துக்கள் இருக்கும்.