சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.கொரோனா பரவல் காரணமாக இந்த ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடக்கவுள்ளது. இதில், இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் - நவம்பரில் நடக்க இருந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கொரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த உலக கோப்பை போட்டியை அடுத்த ஆண்டில் (2021) தங்களுக்கு நடத்தும் வாய்ப்பை தர வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி வருகிறது.

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே பெற்றுள்ளது. 2021-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி நடத்தும் உரிமம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திடம் சென்றால், இந்தியாவுக்குரிய உலக கோப்பை போட்டி 2022-ம் ஆண்டுக்கு மாற்றப்படும்.

இன்று நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில், இதுகுறித்து ஆஸ்திரேலிய நிர்வாகிகளுடன், இந்திய நிர்வாகிகள் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வர உள்ளனர். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்தில் 50 ஓவர் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.