ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் நடக்கும் தேதிகள் அறிவிப்பு

ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் நடக்கும் தேதிகள் அறிவிப்பு... நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெறும் தேதிகள் மற்றும் இடங்கள் குறித்து ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் ஏறக்குறைய லீக் ஆட்டங்கள் முடியும் நிலையில் இருக்கின்றன.

தொடரில் இடம் பெற்றுள்ள 8 அணிகளுக்கும் இன்னும் அதிகபட்சமாக 3 போட்டிகள் வரை மட்டுமே இருப்பதால், அடுத்த சில நாட்களில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும் அணிகளின் விவரம் தெரிந்துவிடும். ஆனால், ஐபிஎல் தொடர் தொடங்கியபோது, லீக் சுற்றுகளின் தேதிகள், இடங்களை மட்டுமே அறிவித்திருந்த ஐபிஎல் நிர்வாகம், ப்ளே ஆஃப் சுற்றுக்கான தேதி, இடங்களை அறிவிக்கவில்லை.

இந்நிலையில், ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடக்கும் இடங்கள் மற்றும் அதன் தேதிகளை அறிவித்துள்ளது.

அதன்படி, ப்ளே ஆஃப் சுற்றில் முதல் தகுதிச் சுற்று ஆட்டம் நவம்பர் 5ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இதில், ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இரு இடங்களைப் பெற்ற அணிகள் மோதும். எலிமினேட்டர் ஆட்டம் நவம்பர் 6ஆம் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதில் 3 மற்றும் 4-வது இடம் பெற்ற அணிகள் மோதுகின்றன.

நவம்பர் 8ஆம் தேதி அபுதாபியில் நடக்கும் 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் தோற்ற அணியும், எலிமினேட்டர் சுற்றில் வென்ற அணியும் மோதுகின்றன.

நவம்பர் 10ஆம் தேதி துபாயில் இறுதிப்போட்டி நடக்கிறது. இதில் முதல் தகுதிச்சுற்றில் வென்ற அணியும், 2-வது தகுதிச்சுற்றில் வென்ற அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகின்றன.