எனக்கு தெரிந்தவரை டோனி தனது கடைசி போட்டியை விளையாடிவிட்டார் - ஆஷிஷ் நெஹரா

டோனி இந்திய அணிக்காக தனது கடைசி போட்டியை மகிழ்ச்சியுடன் விளையாடி முடித்து விட்டார் என்று நினைப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ நிகழ்ச்சியில் பேட்டி அளித்துள்ளார்.

ஆஷிஷ் நெஹரா பேட்டி அளித்தபோது, எனக்கு தெரிந்தவரை டோனி இந்திய அணிக்காக தனது கடைசி போட்டியை மகிழ்ச்சியுடன் விளையாடி முடித்து விட்டார் என்றே நினைக்கிறேன். டோனி இனி நிரூபிப்பதற்கு எதுவும் இல்லை. ஓய்வு குறித்து அவர் இன்னும் வெளிப்படையாக அறிவிக்காததால் அதை பற்றி நாமும், ஊடகத்தினரும் பேசிக் கொண்டு இருக்கிறோம் என்று கூறினார்.

ஐ.பி.எல். போட்டியில் அவர் ஆடுவதற்கும், சர்வதேச போட்டிக்கான அணியில் இடம் பிடிப்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. என்னை பொறுத்தவரை டோனியின் ஆட்டத்திறன் ஒரு போதும் குறையாது. டோனி விளையாட விரும்பினால், கேப்டனோ, பயிற்சியாளரோ, தேர்வாளரோ யாராக இருந்தாலும் டோனியை முதல் ஆளாக அணியில் சேர்ப்பார்கள் என நெஹரா கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடைசியாக ஆடினார். அதன்பின் எந்த போட்டியிலும் அவர் ஆடவில்லை. தற்போது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.