ஐபிஎல் தொடக்க போட்டியான சென்னை - மும்பை ஆட்டத்தை இவ்வளவு பேர் ரசித்துள்ளனரா ?

ஐபிஎல் 2020 சீசன் கிரிக்கெட் திருவிழா கடந்த சனிக்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது.

அம்பதி ராயுடு மற்றும் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் அரைசதம், சாம் கர்ரன் அதிடி ஆட்டம் ஆகியவற்றால் 4 பந்துகள் மீதமுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரசிகர்களுக்கு போட்டியை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வீட்டில் இருந்துதான் போட்டியை காண வேண்டும்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் பெரும்பாலானோர் வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர். அவர்களுக்கு தொலைக்காட்சிதான் சிறந்த பொழுதுபோக்காக விளங்குகிறது. எப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு ரசிர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும்.

இந்நிலையில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் போட்டியை 20 கோடி மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். இதற்கு முன் இந்தியாவின் ஒரு விளையாட்டு போட்டியை இதுபோன்ற அதிகமானோர் பார்த்து ரசித்தது கிடையாது. உலகளவில் நடைபெறும் லீக் போட்டிகளில் இது சாதனை படைத்துள்ளது.