சச்சினை ஆட்டம் இழக்க செய்ததால் எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தன-டிம் பிரிஸ்னன்

2011-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் சச்சின் தனது 99-வது சர்வதேச சதத்தை அடித்தார். இதனால் அவரது 100-வது சதம் எப்போது என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். அதே ஆண்டில் லண்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அப்போது சச்சின் தனது 100-வது சதத்தை பூர்த்தி செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் தெண்டுல்கர் 91 ரன்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் பிரிஸ்னன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் விக்கெட்டை இழந்தார். இதனால் சச்சினுக்கு ‘அவுட்‘ வழங்கப்பட்டது. ஆனால் அப்போது துல்லியமான எல்.பி.டபிள்யூ. இல்லை என சர்ச்சைகள் கிளம்பின.
அந்த டெஸ்ட் போட்டிக்கு பின் டிம் பிரிஸ்னனுக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக அவர் தற்போது மனம் திறந்து கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஓவல் டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் நிச்சயம் சதம் அடித்து இருப்பார். நான் வீசிய அந்த பந்து அநேகமாக லெக் ஸ்டம்புக்கு வெளியே தான் போய் இருக்கும். நான் சத்தமாக அப்பீல் கேட்டதால் நடுவரும் அவுட் கொடுத்து விட்டார். அந்த போட்டிக்கு பிறகு எனக்கு ‘டுவிட்டர்’ மூலம் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதேபோல் நடுவர் ராட் டக்கெர் அதிகமான கொலை மிரட்டல்களை சந்திக்க வேண்டி இருந்தது என்று கூறினார்.

2012-ம் ஆண்டில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் தெண்டுல்கர் தனது 100வது சதத்தை பூர்த்தி செய்தார். 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை சச்சின் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.