பாரா விளையாட்டு போட்டியில் 100 பதக்கங்களுக்கு மேல் வென்ற இந்தியா

சீனா: பாரா விளையாட்டில் இந்தியா சாதனை... சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இதுவரை இல்லாத வகையில் இந்தியா முதல் முறையாக 100 பதக்கங்களுக்கு மேல் வென்றுள்ளது.

ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்திய வீரர் திலீப் மஹது காவிட் தங்கம் வென்றபோது 100 பதக்கங்கள் என்ற மைல்கல்லை இந்தியா எட்டியது.

மொத்த பதக்க பட்டியலில் 29 தங்கம் உள்பட 111 பதக்கங்களுடன் இந்தியா 5-ம் இடத்தில் உள்ளது. 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற போட்டியில் 15 தங்கம் உள்பட 72 பதக்கங்களை வென்றதே, ஆசிய பாரா விளையாட்டில் இந்தியாவின் அதிகபட்ச பதக்கமாக இருந்தது.

இந்நிலையில், இம்முறை இந்திய அணி 100 பதக்கங்களுக்கு மேல் வென்றுள்ளது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நம் இளைஞர்களால் முடியாதது எதுவுமில்லை என்னும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.