எனது மனைவி குழந்தை பெற்றெடுக்கும்போது அருகில் இருப்பது அழகான தருணம் - விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி. இவர் பாலிவுட் நடிகை அனுஷ்காவை திருமணம் செய்துள்ளார். தற்போது அனுஷ்கா சர்மா கர்ப்பிணியாக உள்ளார். இவர்களுக்கு முதல் குழந்தை ஜனவரியில் பிறக்க இருக்கிறது. இதனால் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்திய வீரர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ளனர். கொரோனா காரணமாக அவர்களிடம் குடும்ப உறுப்பினர்கள் வர அனுமதிக்கப்படவில்லை.

இந்த தொடரில் ஏற்கனவே சில வீரர்கள் காயம் காரணமாக நீங்கியுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட், கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியிருப்பது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இளம் வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

விராட் கோலியின் முடிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், ஆங்காங்கே சில விமர்சனங்களும் எழுகின்றன. இந்நிலையில் மூன்று போட்டிகளில் விலக நினைத்தது ஏன்? எனவிராட் கோலி பதில் அளிக்கையில், எங்களுடைய முதல் குழந்தையை எனது மனைவி பெற்றெடுக்க இருப்பதால் நான் சொந்த நாடு திரும்ப விரும்பினேன். எனது வாழ்க்கையில் அது சிறப்பான மற்றும் அழகான தருணம் என்று தெரிவித்துள்ளார்.