அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து ரபேல் நடால் விலகல்

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் அதிகமாக உள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் வருகிற 31-ந்தேதி முதல் அடுத்த மாதம் 13-ந்தேதி வரை நடக்கவுள்ளது. இந்த போட்டி ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்றதாகும். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தாலும் போட்டி திட்டமிட்டபடி நடத்தப்படவுள்ளது.

கொரோனா தடுப்பு உயிர்பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இந்த போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இருந்து நடப்பு சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான ஸ்பெயினின் ரபெல் நடால் திடீரென விலகியுள்ளார். ஏற்கனவே 5 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கால்முட்டி காயத்தில் இருந்து குணமடைய எஞ்சிய சீசன் முழுவதும் ஓய்வு எடுக்கப்போவதாக கூறிவிட்டார்.

இந்நிலையில் போட்டியில் இருந்து விலகியது குறித்து ரபெல் நடால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், கொரோனா பாதிப்பு நிலைமை இன்னும் கட்டுக்குள் வந்தது மாதிரி தெரியவில்லை. இதனால் நீண்ட யோசனைக்கு பிறகு விருப்பமின்றி அமெரிக்க ஓபனில் இருந்து விலகுவதாக அறிவிக்கிறேன். இந்த விஷயத்தில் எனது மனது சொல்வதை பின்பற்றி இந்த முறை அமெரிக்காவுக்கு செல்வதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

கொரோனா அச்சத்தால் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி, முன்னாள் சாம்பியனான சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா, பிரான்சின் மான்பில்ஸ், ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோஸ் உள்ளிட்டோரும் அமெரிக்க ஓபனில் இருந்து பின்வாங்கி விட்டதால், இந்திய வீரர் சுமித் நாகலுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இதனால் அவர் தகுதி சுற்று இன்றி நேரடியாக பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.