கேட்சை தவறவிட்ட ராகுல்... கோபமாக கத்திய ரோஹித் சர்மா

வங்கதேசம்: ரோஹித் சர்மா கோபம்... கே.எல் ராகுல் கேட்சை விட்டதும் ரோஹித் சர்மா கோபத்தை வெளிப்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.


டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 5 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 73(70) ரன்கள் குவித்தார். வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளும், எபடோட் ஹொசைன் 4 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 46 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வங்கதேச அணி பேட்டிங் செய்யும்போது 39.3 ஓவரில் 136 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்திருந்தது.


அப்போது 43 வது ஓவரை ஷர்துல் தாகூர் வீச, அந்த ஓவரின் மூன்றாவது பந்தை ஹசன் தூக்கி அடிக்க மேலே சென்ற பந்து நேராக பின்னால் சென்றது. அதனை கீப்பர் கே.எல் ராகுல் வேகமாக பிடிக்க சென்றார். ஆனால் அவர் கையில் பட்டு பந்து கீழே விழுந்தது. இதனால் ஆட்டம் மாறியது. அதன்பின் எந்தவித வாய்ப்பும் கொடுக்காமல் அவர்கள் இருவரும் வங்கதேச அணியை வெற்றி பெறச் செய்தனர்.

இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு மட்டும் 51 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பறித்தது. இந்திய அணி தோல்விக்கு கே.எல் ராகுல் கேட்சை தவறவிட்டதே காரணம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் கே.எல் ராகுல் கேட்சை விட்டதும் ரோஹித் சர்மா கோபத்தில் கத்தினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.