இந்திய அணிக்கு தேர்வாகாத நிலையில், சூர்யகுமார் யாதவுக்கு ரவி சாஸ்திரி ஆதரவு கருத்து

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நடப்பு ஐபிஎல் சீசனில் 12 ஆட்டங்கள் விளையாடி 362 ரன்களை குவித்த சூர்யகுமார் யாதவ், உள்நாட்டு கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் நிச்சயம் இடம்பெறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் என எல்லோரும் இதனை சொல்லி வந்தனர்.

ஆனால் சூர்யகுமார் யாதவ் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. இதனையறிந்து கொதிப்படைந்த கிரிக்கெட் ஆர்வலர்கள் பிசிசிஐ தேர்வு குழுவை சமூக வலைத்தளங்களில் கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான ஆட்டத்தில் 43 பந்துகளில் 79 ரன்களை விளாசினார்.

பெங்களூர் அணியுடனான ஆட்டத்தில் அவர் விளையாடிய விதம் என்னை டீமில் சேர்க்காமல் தப்பு செய்து விட்டீர்களே என சொல்வதுபோல இருந்தது. இந்நிலையில், இந்திய அணிக்கு தேர்வாகாத நிலையில், சூர்யகுமார் யாதவுக்கு தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆதரவான கருத்தை பதிவிட்டுள்ளார்.

சூர்யகுமாரின் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது ட்விட்டர் பக்கதில், சூரிய நமஸ்கார், வலுவோடு இருங்கள், பொறுத்திருங்கள் என்று கூறி சூர்யகுமாரின் படத்தோடு டேக் செய்து டுவீட் போட்டுள்ளார். இந்த டுவீட் கூடிய விரைவில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக விளையாடுவார் என்பதை உணர்த்துவதுபோல இருந்தது.