மாணவர்களுக்கான மாநில அளவிலான கால் பந்தாட்ட போட்டி

தஞ்சாவூர்: கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், கும்பகோணம் கால்பந்தாட்ட சங்கம் மற்றும் நகர மேனிலைப்பள்ளி பழைய மாணவர்கள் சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான, 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கிடையேயான கால் பந்தாட்ட போட்டி தொடங்கியது.

2 நாட்கள் நடைபெறும் இப்போட்டியை தமிழ்நாடு 8 -வது பட்டாலியன் அவில்தார் பிரசாத் தொடங்கி வைத்தார். முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் சிவகுமார், நிர்வாகிகள் ரவிசந்திரன், சிவசந்திரன், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போட்டியில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 35 அணியினர் கலந்து கொண்டு விளையாடினர்.

இறுதி போட்டியில் வெல்லும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. 35 அணியினரும் தங்களின் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.